Tuesday 25 July 2017



லக்ஷ்மி கல்யாண வைபோகமே

ஜாதக ஆய்வில் திருமணப் பொருத்தம்.

முகவுரை:  ஆடி முடிந்து ஆவணி தொடங்கியவுடன் சுப காரியங்கள் தொடக்கமாக
திருமணம் , மனிதர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு மங்கள நிகழ்ச்சி.  தனித்தனியாக வாழ்ந்த இருவர் மனதாலும், உடலாலும் இணையும் ஒரு உன்னத நிகழ்ச்சி.  ஒரு பெண் சிட்டுக் குருவியாய்  ஆடிப் பாடி விளையாடிய தன் தாய் வீட்டை விட்டு மற்றொரு வீட்டில் சகல வித பொறுப்புகளோடு மஹாலக்ஷ்மியாய் வாழ ஆரம்பிக்கும் ஒரு சுபமான தருணம். திருநிறைச் செல்வியாய் இருந்தவள் திருமகளாகி ஒரு இல்லக் கிழத்தியாய், தாயாய்,  சகல செளபாக்யங்களோடு ஒரு கோயிலில் கொலு வீற்று இருக்கப் போகிற தருணம் ஆரம்பிக்கப் போகிற நேரம்.
ஆயிரம் காலத்து பயிறாய் வளரப்போகிற இந்த உறவை நிர்ணயிக்க  நமது பாரம்பரிய சித்தாந்தங்கள் மூலமாக ரிஷிகளும், அதன் வழி வந்த சாஸ்திரங்களும் சில கட்டுப்பாடான கோட்பாடுகளை ஏற்க்க சொல்கின்றன.  அதன் ஒரு பகுதி,  இந்த பந்தத்தை ஏற்க்கப்போகும் ஒரு ஆணும், பெண்ணும் மனோ ரீதியாகவும், சரீர ரீதியாகவும் பொருத்தப்பட வேண்டும் என்கிற விதி.  உறவுகளுக்குள் ஏற்படும் திருமண பந்தம் மனோ ரீதியாக எடுக்கப்பட்டன.  உறவுகளுக்கப்பால் ஏற்படும் திருமண பந்தம் ஜனன ஜாதகத்தின் மூலமாக பொருத்தப்பட்டன. திருமணத்திற்குப் பின் தம்பதிகள் சீரும் சிறப்புடன்வாழ திருமணப் பொருத்தம் பார்கக வேண்டியது மிக அவசியமாகும். இதை அவர்களின் ஜனன ஜாதகத்தின் மூலமாக அவர்கள் இருவருக்கும்  மனம், குணம், தேக சம்பந்தமான பொருத்தம் உள்ளதா என்வும், அவர்களின் சந்தோஷம், ஆயுள் பாக்யம் , குழந்தை பாக்யங்கள்,  நோயற்ற வாழ்க்கை ஆகியவையும் எப்படி இருக்கின்றன் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.    இதை எல்லோடும் எளிதாக புரிந்து கொள்ளவேண்டும் என்கிற நல்ல நோக்கத்தோடு  வேத சாராம்ஸத்தின்படி என்னால் முடிந்த அளவுக்கு மிக எளிமையான முறையில் ஒரு சிறிய கை ஏடாக தொகுத்து அளித்துள்ளேன்.  திருமண பொருத்தம் பார்க்கும் அனைவருக்கும் இந்த கைஏடு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி
ஜோதிஷ் பாரதி, ப்ரஸ்ன்ன ஜோதிஷ் பாரதி
சிரோண்மனி ஸ்ரீரங்கம் சு. கிருஷ்ணன் ஐய்யங்கார் ,
இயக்குனர்,ஆசிரியர், ஸ்ரீ இராமனுஜர் ஜோதிட பயிற்சி &கல்வி மையம், சென்னை.

விவாஹத்திற்கு ஸ்திரீ புருஷ நக்ஷத்ராதி பொருத்தங்கள்

தினப் பொருத்தம் : (செளக்யமாக இருத்தல்) ஸ்த்ரீ ஜன்ம நக்ஷத்திரம் முதல் புருஷ நக்ஷத்திரம் வரை எண்ணிக் கண்டது 2,4,6,8,11,13,15,17,18,20,24,26 ஆக வந்தால் உத்தமம்.  12வது நக்ஷத்திரத்தின் 1ம் பாதமும், 14ம் நக்ஷத்திரத்தின் 4ம் பாதமும், 16வது நக்ஷத்திரத்தின் 3ம் பாதமும் நீக்கி மற்ற பாதங்கள் மத்யமம்.  இதில் சொல்லாததும், அஷ்டம ராசி நக்ஷத்திரங்களும் பொருந்தாது. 
ஏகதினப் பொருத்தம்:  ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், விசாகம், உத்திரட்டாதி  திருவோணம், ரேவதி இவை 9ம்  ஸ்திரீ புருஷர்களுக்கு ஒரே நக்ஷத்திரமானால் உத்தமம்.  அஸ்வினி, கார்த்திகை, மிருகஷீர்ஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் இவை 10ம் மத்யமம்.  மற்றது பொருந்தாது.  ஸ்தீரி புருஷர்களுக்கு ஒரே ராசியானால் புருஷ நக்ஷத்திரம் முந்தியதும், மேற்படி ஒரே நக்ஷத்திரமானால் நக்ஷத்திர பாதம் முந்தியது சுபம்.  மற்றவை பொருந்தாது.

கணப்பொருத்தம்: (செல்வ வளம், அன்யோன்யம்) அஸ்வினி, மிருகஷீர்ஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், ஸ்வாதி, அனுஷம், திருவோணம், ரேவதி இவை 9ம் தேவகணம் .
பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி இவை 9ம் மனுஷ்யகணம்.
கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் இவை 9ம் ராக்ஷஸ கணம்.
ஸ்திரீ புருஷர்களுக்கு ஓரே கணமானால் உத்தமம்.  தேவ கணமும், மனுஷ்ய கணமும்  மத்யமம், ராக்ஷஸ கணமும் தேவ கணமும் அதமம்.  மனுஷ்ய கணமும் ராக்ஷஸ கணமும் மிருத்ய பயம், பொருந்தாது.  ஸ்திரீ ராக்ஷஸம் கூடாது.  புருஷ ராக்ஷஸம் உத்தமம்.  ஸ்திரீ நக்ஷத்திரத்திற்கு புருஷ நக்ஷத்திரம் 13 க்கு மேற்பட்டால் ஸ்திரீ ராக்ஷஸம் தோஷமில்லை. 

மஹேந்திர பொருத்தம்:  (ஆயுள் விருத்தி, மற்றும் ஸந்தான பாக்யம்) ஸ்திரீ ஜன்ம நக்ஷத்திரம்  முதல்  புருஷ ஜன்ம நக்ஷத்திரம் வரை எண்ணி வருவது 4,7,10,13, 16,19,22,25 ஆனால் பொருந்தும்.  இல்லாவிடில் பொருந்தாது.
இங்கே அன்பர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும்.  தினப் பொருத்தத்தில் பொருந்தாத 7ம் நக்ஷத்திரம் வத தாரை என்று சொல்லும் போது எப்படி மஹேந்திரத்தில் பொருந்தும் என்ற சந்தேகம் வரும்.   மஹா கேந்திரம் என்பதே மஹேந்திரம் ஆகும்.  அதாவது ஸ்திரீ ஜன்ம நக்ஷத்திரம் இருக்கும் ராசியில் இருந்து எண்ணும் போது புருஷ ஜன்ம நக்ஷத்திரம் நான்காவது ராசியில் வரும் ஏழாவது நக்ஷத்திரமாக வந்தால் பொருந்தும். இது மஹா கேந்திரப் பொருத்தமாகும்.

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்: (தீர்கக சுமங்கலிப் பாக்யம்) ஸ்திரீ ஜன்ம நக்ஷத்திரம் முதல் புருஷ ஜன்ம நக்ஷத்திரம் வரை எண்ணி வருவது 13க்கு மேற்பட்டால் உத்தமம்.  7க்கு மேல் மத்யமம்.  அதற்குள் வந்தால் பொருந்தாது.   
யோனி பொருத்தம்: ( தாம்பத்ய சுகம்) அஸ்வினி, சதயம் : குதிரை,     பரணி,  ரேவதி: யானை, 
                               பூசம், கார்த்திகை: ஆடு,         ரோகிணி, மிருகசீர்ஷம்: பாம்பு,
                               திருவாதிரை, மூலம் : நாய்,      ஆயில்யம், புனர்பூசம்: பூனை,
                               மகம், பூரம்  :  எலி,    உத்திரம், உத்திராடம்,  உத்திரட்டாதி: எருது
                               ஸ்வாதி, ஹஸ்தம்: எருமை கிடா,  சித்திரை, விசாகம்:  புலி
                               கேட்டை,  அனுஷம்: மான்,  பூராடம், திருவோணம் :  குரங்கு. 
                               பூரட்டாதி, அவிட்டம்:  சிங்கம். 
இந்த நக்ஷத்திரங்களில் முன் உள்ளது ஆண் நக்ஷத்திரம், பின்உள்ளது பெண் நக்ஷத்திரம் ஆகும். பசுவுக்கு புலியும்,  குதிரைக்கு எருமையும், குரங்குக்கு ஆடும், ஆடுக்கு புலியும், மான்,பூனைக்கு நாயும், எலிக்கு பாம்பு பூனையும், யானைக்கு சிங்கமும், பாம்புக்கு பூனையும்,  கீரியும்  வைரியாகும். 
மானுக்கு பசுவும், ஆடுக்கு குதிரையும், நாய்க்கு மனுஷனும் நட்பாகும்.  மற்றது சமம். குரங்கு எல்லா யோனிக்கும் நட்பு.   ஸ்திரீ, புருஷர்களுக்கு நக்ஷத்திரங்களுக்குண்டான மித்ர (நட்பு), சம யோனிகளாயிருந்தால் உத்தமம்.  சத்ரு யோனி அதமம்.  சேர்க்கக் கூடாது. புருஷனுக்கு ஸ்திரீ யோனியும், ஸ்திரீக்கு புருஷ் யோனியும். கூடவே கூடாது.

ஜன்ம ராசி பொருத்தம்  (மன ஒற்றுமை)  ஸ்திரீ ஜன்ம ராசி முதல் புருஷ ஜன்ம ராசி வரை எண்ணிக் கண்டது ஸ்திரீ ராசிக்கு புருஷ ராசி 2-12 ஆனால் மிருத்யு, கூடாது.  12-2 ஆக வந்தால் ஆயுள் விருத்தியாகும்.  நல்லது, உத்தமம்.  11-3 ஆக வந்தால் சுகம் கூடும்.  10-4 ஆக வந்தால் செல்வம் சேரும்.  ஷஷ்டாஷ்டகமான 6-8 கூடாது.  7க்கு 7ஆக வந்தால் (சம சப்தமாக) மிகவும் உத்தமம்.  வாழ்க்கையில் அனைத்து சந்தோஷமும் கூடும். 
ராசி அதிபதி பொருத்தம்:  (சம்பந்திகளின் இணக்கம்) சூரியன்: சிம்மத்திற்கும்,  சந்திரன்: கடகத்திற்கும் , செவ்வாய் : மேஷம், விருச்சிகத்திற்கும், புதன்: மிதுனம், கன்னிக்கும்,  குரு : தனுசு , மீனத்திற்கும், 
சுக்ரன்: ரிஷபம், துலாத்திற்கும்  சனி: மகரம், கும்பத்திற்கும் அதிபதிளாவார்கள்.   ராகு, கேதுவுக்கு வீடுகள் கிடையாது.
 ஸ்திரீ ஜன்ம ராசி அதிபதி புருஷன் ஜன்ம ராசி அதிபதிக்கு மித்திரர்களாக இருப்பது உத்தமம்.  சம மித்திரர்களானாலும் உத்தமம்.  

வஸ்யப் பொருத்தம்:  (குடும்ப ஓற்றுமை) மேஷத்திற்கு சிம்மம்,விருச்சிகமும்,  ரிஷபத்திற்கு கடகமும், துலாமும்,  மிதுனத்திற்கு கன்னியும், கடகத்திற்கு விருச்சிகமும், தனுசும், சிம்மத்திற்கு துலாமும் , மீனமும், கன்னிக்கு ரிஷபமும், மீனமும்,  துலாத்திற்கு மகரமும்,  விருச்சிகத்திற்கு கடகமும், கன்னியும், தனுசுக்கு மீனமும், மகரத்திற்கு மேஷமும், கும்பமும்,  கும்பத்திற்கு மீனமும் , மீனத்திற்கு மகரமும் வஸிய ராசிகளாகும்.  ஸ்திரீ ஜன்ம ராசிக்கு  புருஷ ஜன்ம ராசி வஸியமானால் உத்தமம்.   புருஷ ஜன்ம  ராசிக்கு ஸ்திரீ ஜன்ம ராசி வஸியமானால் மத்யமம்.  மற்றவை கூடாது.

ரஜ்ஜு பொருத்தம்:  (திருமாங்கல்ய பலம்) ஸ்திரீ புருஷ நக்ஷத்திரங்கள் ஓரே ரஜ்ஜுவாகில் பொருந்தாது.  பின்ன ரஜ்ஜுவாக இருத்தல் வேண்டும்.  அதிலும் இரண்டும் ஏர்முகமாக(ஆரோகணம்) இருக்க வேண்டும்.  இரண்டும் இறங்கு(அவரோகணம்) முகத்திலிருந்தால் நாசம் கூடாது.  ஒன்று ஆரோகணத்திலும் மற்றொன்று அவரோகணத்திலும் இருந்தால் விவாஹம் செய்யலாம். ஒரே வரிசையில் இருந்தால் சிரோ ரஜ்ஜுவானால் புருஷனுக்கு ஆகாது.  கண்ட ரஜ்ஜுவானால் ஸ்திரீக்கு ஆகாது.  நாபி ரஜ்ஜுவானால் புத்ரஹானி , ஊரு ரஜ்ஜுவானால் தரித்திரம்.  பாத ரஜ்ஜுவானால் தேச ஸஞ்ஞாரம். 
மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆரோ சிரோ ரஜ்ஜு,  ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆரோ கண்ட ரஜ்ஜு, திருவாதிரை, ஸ்வாதி, சதயம் அவரோ கண்ட ரஜ்ஜு,  கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆரோ நாபி ரஜ்ஜு,  புனர்பூசம், விசாகம், பூரட்டாதி அவரோ நாபி ரஜஜு,  பரணி, பூரம், பூராடம் ஆரோ ஊரு ரஜ்ஜு,  பூசம், அனுஷம், உத்ரட்டாதி அவரோ ஊரு ரஜ்ஜு, அஸ்வினி மகம், மூலம், ஆரோ பாத ரஜ்ஜு,  ஆயில்யம், கேட்டை, ரேவதி அவரோ பாத ரஜ்ஜு.  இந்த அட்டவணயை பார்த்து ரஜ்ஜு பொருத்தம் செய்யவும்.  ரஜ்ஜு பொருத்தம் எல்லா வர்க்கத்தை சேர்ந்தவர்க்கும் முக்கியமானது. ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் திருமணம் செய்யக்கூடாது.
வேதை பொருத்தம்:  (குடும்ப அமைதி) அஸ்வினிக்கு கேட்டையும், பரணிக்கு அனுஷமும், கார்த்திகைக்கு விசாககமும், ரோஹிணிக்கு ஸ்வாதியும், மூலத்திற்கு ஆயில்யமும், பூராடத்திற்கு பூசமும், உத்திராடத்திற்கு புனர்பூசமும், திருவோணத்திற்கு திருவாதிரையும், மகத்திற்கு ரேவதியும், பூரத்திற்கு உத்திரட்டாதியும், உத்திரத்திற்கு பூரடாதியும், ஹஸ்தத்திற்கு சதயமும், வேதையாகும். மேலும் மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஒன்றொக்கு ஒன்று வேதையாகும். ஸ்திரீ புருஷர்களுக்கு ஜன்ம நக்ஷத்திரங்கள் ஒன்றொருக்கு ஒன்று வேதையாக வரக்கூடாது.

நாடி பொருத்தம்:  (உடல்)  அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், ஹஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய ஒன்பதும் தக்ஷண பார்ச்சுவ நாடி,  பரணி, மிருகசீர்ஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும் மத்திம நாடி, கார்த்திகை,  ரோகிணி, ஆயில்யம், மகம், ஸ்வாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி ஆகிய ஒன்பதும்  வாம பார்ச்சுவ நாடி.  
ஸ்திரீ புருஷர்களுக்கு இருவரின் நக்ஷத்திரங்கள் மத்திய நாடியாக இருந்தால், பெண்ணுக்கும், தக்ஷிண வாம பார்ச்சுவ நாடியாகில் ஆணுக்கும் தோஷம்.  வேறு வேறு நாடியாக இருந்தால் தோஷமில்லை, பொருத்தம் உண்டு.  நாடி பொருத்தம் மிகவும் அவசியம்.
மேலே குறிப்பிட்டுள்ள பொருத்தங்களில் தினப் பொருத்தம் பிராமணர்களுக்கும், கணப் பொருத்தம் க்ஷத்திரியர்களுக்கும்,  ராசி பொருத்தம் வைசியர்களுக்கும், யோனி மற்றவர்களுக்கும்,  ரஜ்ஜு எல்லா ஜாதியினருக்கும் மிகவும் அவசியம்.   சாஸ்திரங்களில் சொல்லியபடி மிருகசீர்ஷம், மகம், ஸ்வாதி, அனுஷம், இந்த நான்கிற்கும் மனப் பொருத்தம் இருந்தாலே போதுமானது.  மேலும், ஆயில்யம், கேட்டை, மூலம், விசாகம் இந்த நான்கு நக்ஷத்திரங்களும் தோஷம் உள்ளவை என பாரம்பரிய ஜோதிஷ சாஸ்திரங்களில் சொல்லப்படவில்லை.  மனிதர்களின் மனோ பயம் தான் இதற்கு காரணம்.   
நக்ஷத்திர பொருத்தம் பார்த்த பிறகு பார்க்க வேண்டிய முக்ய பொருத்தங்கள்.
விவாஹ பொருத்தம் பார்க்கும் போது முதலில் மேலே சொன்ன தசப் பொருத்தம் முக்கியம்.  பிறகு ஜாதக ரீதியாக பொருத்தம் பார்ப்பது முக்கியம்.  நக்ஷத்திர பொருத்தம் முக்யமானதாக இருந்தாலும் ஜாதக பொருத்தமும் அதைவிட முக்கியம்.  
2.  ஏழாவது தாரை ஆண் நக்ஷத்திரமும், இருபத்தி இரண்டாவது பெண் நக்ஷத்திரமும் கூடாது. அதாவது பெண்ணின் நக்ஷத்திரம் முதல் எண்ணும் போது ஆணின் நக்ஷத்திரம் ஏழாவதாக வரக்கூடாது.  அதேபோல் பெண்ணின் இருபத்தி இரண்டாவது நக்ஷத்திரமாகவும் வரக்கூடாது.
3.  ஆண் ஜாதகத்தின் 10 வது அதிபதி (லக்னத்தில் இருந்து எண்ண வேண்டும்) பெண் ஜாதகத்தில் அவரின் லக்னத்தில் இருந்து 6,8,12ம் இடங்களில் மறையக்கூடாது.  நீச்சம் ஆகக்கூடாது. அதுவே ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால் உத்தம பொருத்த்ம்.
4.  பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் கேது சேக்கை இருந்தால் ஆண் ஜாதகத்தில் சுக்ரனும் கேதுவும் சேரக்கூடாது.  அதே போல் செவ்வாய் ராகு சேர்க்கை பெண் ஜாதகத்தில் இருந்தால் குரு ராகு சேர்க்கை ஆண் ஜாதகத்தில் இருக்கக்கூடாது.   திருமண வாழ்க்கை போர்க்களமாக  இருக்கும்.  சில சமயங்களில் பிரிவு கூட நேரலாம்.
5.  பெண்ணின் ஜாதகத்தின் ஜன்ம ராசியோ, லக்னமோ ஆண் ஜாதகத்தின் ராசிக்கு அல்லது லக்னத்திற்கு ஷஷ்டாஷ்டகமாக அதாவது 6க்கு 8ஆக வரக்கூடாது.
6.  திருமண காலத்தில் ஒருவரின் தசா முடியும் காலம் எதிர் பாலரின் ஜாதகத்தில் அதே தசா காலம் 11 மாதங்களுக்குள் ஆரம்பிக்கூடாது. 
7.   ஒருவரின் ஜாதகத்தில் சுக்ரன் இருக்கும் ராசியில் எதிர் பாலரின் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தால் நல்ல பொருத்தம். 
8.   அதே போல் ஒருவரின் ஜாதகத்தில் தோஷம் தரும் கிரஹங்கள் அந்த அந்த வீட்டில் இருக்குமேயானால், அது எதிர் பாலரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6, 8, 12 ல் மறைவது அல்லது நீச்சமாவது நல்லது. 
9.  ஒரு வரின் ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி இன்னொருவரின் ஜாதகத்தில் நீச்சம் ஆக கூடாது.  நீச்ச கிரஹ சேர்க்கை கூடாது.  (அதாவது ஒரு சொல் வழக்கு உண்டு.  இரண்டாமாதி நீச்சமானவன் வீட்டில் பெண் எடுக்கவும் கூடாது இரண்டாமாதி நீச்சமானவனுக்கு பெண் கொடுக்கவும் கூடாது)
10.  பெண்ணின் லக்னமும் ஆணின் லக்னமும் ஒன்றொக்கொன்று திரிகோணத்தில் இருந்தால் நல்லது.
11.  அதேபோல் ஒரு பெண்ணின்  லக்னாதிபதி அவளுக்கு சேர்க்கும் ஆணின் ஜாதகத்தின் ஒன்பதாம் அதிபதியாக  இருந்தால் அவளே பாக்யவதி.
12.  ஒருவரின் ஜாதகத்தில் பனிரெண்டாம் பாவத்தில் உஷ்ணகிரஹம் இருந்தால் இன்னொருவரின் ஜாதகதில் தட்ப கிரஹம் இருக்கவேண்டும்.  அதாவது அந்த உஷ்ணத்தை தணிக்க கூடிய சாத்வீக கிரஹம் இருக்க வேண்டும்.
13.   ஒருவரின் ஜாதகத்தில் ஏழாம் பாவம், (களத்திர பாவ.ம்) , எட்டாம் பாவம்,(மாங்கல்ய ஸ்தானம்),   இரண்டாம் பாவம்,(குடும்ப ஸ்தானம்),  நான்காம் பாவம்(சுகஸ்தானம்)  ஆகியவை பாபர்களின் பிடியில் இல்லாம இருப்பது நல்லது.  இதில் எந்த பாவம் பாபர்களின் பிடியில் இருக்கிறதோ அந்த பாவம் பாதிக்கும்.    நான்காம் பாவமானால் சுகமான வாழ்க்கை இருக்காது. இரண்டாம் பாவமானால் குடும்பம் வாழ்க்கை வறுமையின் பிடியில் சிக்கும்.  ஏழாம் பாவம், எட்டாம் பாவம் திருமண பிரிவை தரும். 
14.  அடுத்து கிரஹ இணைவுகள்  .   ஆணின் ஜாதகத்தில் சூரியன் சுக்ரன் இணைவு கூடாது. பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் சுக்ரன் இணைவு கூடாது.  இவை உடலில் உள்ள அணுக்களின் குறைபாட்டை சொல்லும் .
15.  ஆணின் ஜாதகத்தில் சூரியனும் சுக்ரனும் பலமாய் ஒற்றை ராசிகளின் நின்றால் நல்லது. அதேபோல் பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாயும் சந்திரனும் பலமாய் இரட்டை படை ராசிகளில் நின்றால் நல்லது   
16.  அதே போல் இரண்டு பேர் ஜாதகத்தின் மூன்றாம் அதிபதிகள் பகை பெறக் கூடாது.
17.  நபும்சக அலி யோகங்கள் எனப்படும் விதிப்படி ஆணின் ஜாதகத்தின் லக்னாதிபதி பெண்ணின் ஜாதகத்தில் அலி கிரஹ சேர்க்கை பெறக் கூடாது.
18.  ஒருவரின் ஜாதகத்தில் ராகு தனியாக நின்றால் இன்னொருவர் ஜாதகத்தில் தனியாக ராகு நின்றால் அந்த ஜாதகத்தினை சேர்க்ககூடாது.
19.  ஒருவரின் ஜாதகத்தின் ஒன்பதாம் அதிபதி இன்னொருவர் ஜாதகத்தில் பாப ஹர்த்தாரி யோகம் பெறக் கூடாது.  முக்யமாக பெண்ணின் ஜாதகத்தில் இது இருக்க கூடாது.
20.  பெண்ணின் ஜாதகத்தில்   அவளின் ஆறாம் அதிபதி ஆணின் ஜாதகத்தில் உச்சம் பெறக்கூடாது.
21.  பாப சாம்யங்கள் பொருத்தம் எனப்படும் பாபர்கள் சம்பந்தம் இருவர் ஜாதகத்திலும் அதிக வித்யாசம் இருக்க  கூடாது.  பெண்கள் தோஷ சாம்யம் ஆண்களை விட குறைவாக இருக்க வேண்டும். 
22.  இரண்டு பேர் ஜாதகத்திலும் சுப ஸ்தானமான நான்காம் வீட்டில் அதிக உஷ்ண பாபர்கள் இருக்க கூடாது.  இரண்டு குடும்பத்திலும் பெண்கள் ஒற்றுமை குறைவு ஏற்படும்.
23.  ஒருவர் ஜாதகத்தின் ஏழாம் அதிபதி இன்னொருவர் ஜாதகத்தில் விருச்சிகத்தில் அமராமல் இருப்பது.
24.  ஆத்ம காரகனோ, மனோகாரகனோ ஜாதகத்தில் நீச்சமோ, 6,8,12ல் மறையாமல் இருப்பது இருவரின்தாம்பத்ய வாழ்க்கையில் ஆத்ம, மனோ பலத்தை கூட்டி அன்யோன்யத்தை வளர்க்கும்.
25.  ஆண் ஜாதகத்திலோ, பெண் ஜாதகத்திலோ  அவர்களின் மூன்று மற்றும் ஏழாம் அதிபதி பரிவர்த்தனை பெறுவதோ, பாதாகாதிபதி சேர்க்கையோ பெறக்கூடாது.

இவைகளும் பார்த்து ஜாதகத்தினை பொருத்துவது நல்லது.  இன்றைக்கு இருப்பது வேகமான உலகம்.  ஆனாலும் இன்றய கால கட்டத்தில்தான் அதிக விவாஹரத்துக்கள் ஏற்படுகிறது. ஆகவே ஆயிரம் காலத்து பயிரான இந்த திருமண வாழ்க்கையை நன்கு பொறுமையாக பரிசீலித்து ஜாதகங்களை இணைப்பது நல்ல ஆரோக்யமான குடும்ப வளர்ச்சியை தந்து சந்ததிகள் பெருகி சந்தோஷமமும் பெருகும்.

வாழ்க வளமுடன்.   ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.