Friday 1 July 2016




வீடுகள்



ஜாதகத்தில் வீடுகளும் கிரஹங்களும் உறவுகளோடு உறவாடி கூட்டாக வாழ சொல்கிறார்களா, அல்லது உறவுகளை வெறுத்து தனியாக தனிக் குடித்தனமாக வாழ சொல்கிறார்களா.


ஜாதகத்தின்பனிரெண்டு வீடுகளுமே ஒரு ஜாதகனுக்கு முக்கியம்.  ஒரு வீட்டின் தொடர்பு  இல்லாமல் அவன் சுகப்படுவது என்பதே இயலாத காரியம்.  அவன் ஒரு காரியத்தை செய்து சுகப்படவேண்டும் என்றால்  உறவு சார்ந்த பாவங்கள் துணை புரிய வேண்டும்.  

ஒருவன் ஒரு காரியத்தை செய்ய அவனுக்கு முதலில் ஆதம பலம் தேவை.  சுயநலமற்றவனாக, எதையும் எதிர்பார்க்காதவனாக, விட்டு கொடுத்து தியாக உள்ளம் உள்ளவனாக இருக்க லக்னம் எனும் முதல் வீடு சுய பலம் பெறவேண்டும்.

ஒருவன் தன் மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்றால் இரண்டாம் பாவமான அவனுக்கு வந்து சேர்ந்த குடும்ப உறவு முறைகளின் ஒத்துழைப்பு வேண்டும். எல்லோரையும் அனுசரித்து பேசும் குணம் வேண்டும்.  

அடுத்து தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்கு ஏற்ப அவன் தம்பி கூட நிற்க வேண்டும்.  அதுவே அவனுக்கு ஒரு பெரிய தைரியத்தை கொடுத்து அந்த செயலை செய்யவைக்கும். அதற்கு மூன்றாம் பாவம் துணை புரிதல் வேண்டும்.

அடுத்து அம்மாவின் ஒத்துழைப்பு . அவளின் மனம் கோணாமால் அந்த விஷயத்திற்கு ஒத்துழைப்பு வேண்டும்.  அவளிடம் இருக்கும் அவளுக்கு அம்மா  போட்ட நகைகளை பிள்ளைகளுக்கு கொடுத்து உதவ நான்காம் பாவத்தின் ஒத்துழைப்பு வேண்டும். அவளை முன்னிருத்தி செய்யும் காரியத்தை பார்த்து சந்தோஷம் கொண்டாலே நமக்கு எல்லா சுகமும் கிடைத்த சந்தோஷம் வரும்.

அடுத்து புத்திசாலிதனமாக ஏற்பாடுகள் செய்து,  பிள்ளைகளின் ஒத்துழைப்போடு அந்த காரியத்தை அவன் செய்யவேண்டும்.  ஒவ்வொரு பிள்ளையும் ஒரு வேலையை எடுத்துக் கொண்டு செய்யவேண்டும். ஊராரெல்லாம், பிள்ளைகள் அப்பாவை கஷ்டப்படுத்தாமல் எப்படி செய்கிறார்கள் என்று போற்றி புகழவேண்டும். அதற்கு நல்ல பூர்வ புண்யம் அமைந்து இருக்க வேண்டும். அதற்கு ஐந்தாம் பாவம் துணை புரிய வேண்டும்.

அடுத்து ஆறாம் பாவமான அம்மான் ஸ்தானம்.   தாய் மாமன் இல்லையென்றால் ஏது ஒரு விசேஷம். அவன் தானே முதல் சீரும், கடை சீரும் தருபவன்.  எந்த விசேஷத்திலும் அம்மான் மொய் தானே முதலில்.  அவனுக்கு தானே முதல் பத்திரிகா.     அவன் தானே மெட்டி வாங்கி தாய் மாமன் சீரோடு தருபவன்.  எனவே அவனின் ஒத்துழைப்பும் தேவை. மேலும் அந்த சமயத்தில் நோய் நொடி தாக்காமல்  சுகமாக நடத்த இந்த பாவம் துணை செய்ய வேண்டும்.

அடுத்து ஏழாம் பாவம்   ஜாதகனுக்கு அந்த நேரத்தில் தோள் கொடுக்க நண்பர்கள் முக்கியம். அவர்கள் துணை இன்றியமையாதது.  கூட இருந்து வேலைகளை பிரித்து கொண்டு செய்வார்கள்.எனவே அதுவும் துணை புரிய வேண்டும்.அந்த விழாவிற்கு அழைத்த வெளி நபர்கள் எல்லாம் மன நிறைவோடு  வந்து வாழ்த்த வேண்டும்.

அடுத்து எட்டாம் பாவம்.   அந்த விழாவினை சிறப்பாக நடத்த,   ஏற்கனவே போட்டு வைத்த முதலீடுகளின் வட்டிகள்,  தன் அலுவலகத்தில் போட்டு வைத்த இபிஎப், கிராஜிவிடி முதலியவற்றின் முன் பணம்,   பாரம்பரிய சொத்துக்களை விற்று நடத்த அந்த பாவத்தின் துணையும் வேண்டும்.  தன் மனைவியின் சகோதரன் அந்த குழந்தையின் தாய் மாமனாக வந்து நிற்க வேண்டும். அதற்கு இந்த பாவம் துணை செய்ய வேண்டும்.  அதேபோல் விழாவிற்கு வந்தவர்கள் எல்லாம் எந்த குறையும் சொல்லாமல் மனம் மகிழ நல்ல போஜனம் அமைய இந்த பாவம் துணை செய்ய வேண்டும்.

அடுத்து ஒன்பதாம் பாவம் .   தந்தையின் ஆசியும், அவர்களை சார்ந்த உறவு முறைகளும் எந்த சுணக்கமும் காட்டாமால் வந்து இருந்து நடத்தி கொடுக்க இந்த பாவம் துணை புரிய வேண்டும். மேலும் ஜாதகனின் தகப்பன் முன் நிற்க வேண்டும். தன்பிள்ளை கஷட்ப்படக்கூடாது என்று தன்னிடம் உள்ள பொருளை கொடுத்து உதவ இந்த பாவம் முக்கியம்.

அடுத்து தன் அலுவலகத்தில் இருக்கும் ஒத்துழைப்பு.  பணம் பத்தவில்லை என்றால் கூட இருக்கும் அலுவலக நண்பர்கள் கொடுத்து உதவ அவர்களின் ஒத்துழைப்பு,.  வேலை பார்க்கும் அலுவலகத்தில் கேட்டு வாங்கும் முன் பணம் இவைகளுக்கு இந்த பாவம் ஒத்துழைப்பு அவசியம்.

அடுத்து தான் மகிழ்ச்சியாக அந்த விழாவினை நடத்தி முடிக்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேற,  தான் சேர்த்து வைத்த பணம், பொருளையெல்லாம் தன் பிள்ளைக்கு கொடுத்து சந்தோஷப் பட இந்த பாவம் துணை செய்ய வேண்டும்.   அடுத்து தன் சம்மந்தி வீட்டில் ஏந்த குறையும் சொல்லாமல் நிறைவாக செய்ய இந்த பாவம் உதவி புரிய வேண்டும்.

அடுத்து விரய பாவம் எனும் பணிரெண்டாம் பாவம் .  மேற்சொன்ன பாவங்கள் எல்லாம் நல்ல முறையில் துணை புரிந்து உதவிகள் செய்து அந்த விழாவினை சீரும் சிறப்பாக செலவு செய்து கொண்டாட இந்த பாவம் துணை புரிந்தால் தான் ஜாதகனுக்கு நிம்மதியான அயன சயன சுகம் இருக்கும்.    

ஆகவே, ஒரு ஜாதகன், தன் வீட்டில் ஒரு விழாவினை நல்ல முறையில் செய்யவே, இந்த பனிரெண்டு பாவங்களும் துணை புரிய வேண்டும் என்றால், அவன் வாழ்க்கை முழுவதற்க்கும் இந்த பாவங்கள் அணைத்துமே அவனுக்கு ஒத்துழைக்க வேண்டுமல்லவா.  இவைகளெல்லாம் கூட்டாக இருந்து ஒருவனின் வாழ்க்கையை தீர்மானிக்கும் போது,  கூட்டுக் குடும்பத்தை விட்டு தனிமையில் வாழ்வது நியாயமா சகோதர சகோதரிகளே………………………சிந்தியுங்கள்.

நல்லதை எடுத்துச் சொல்ல குடும்பத்தின் தலைவர் என்ற முறையில் சூரியன் தேவை.

பாசத்தை கொடுத்து அரவணைக்க தலைவி என்ற முறையில் சந்திரன் தேவை.

தைரியத்தை கொடுத்து வாழ்வில் முன்னேற தம்பி என்ற முறையில் செவ்வாய் தேவை.

நல்ல புத்தியை கொடுத்து எல்லோரையும் அனுசரித்து செல்ல சமயத்தில் துணைபுரிய மாமன் என்ற முறையில் புதன் தேவை.

கோபம் தாபங்களை குறைக்கும் நிலையை கொடுத்து.  குடும்ப பெரியவர்களின் பேச்சுக்கு ஏற்ப் வாழ நல்ல தெய்வ சிந்தனையும்,  ஆழ்ந்த அறிவும்  தரும் குரு தேவை.

வாழ்க்கையின் சந்தோஷங்களை  தன் மனைவி மக்களோடு கொண்டாட நல்ல வசதியை கொடுத்து அடுத்தவர்களையும் சந்தோஷப்படுத்த களத்திரம் என்ற முறையில் சுக்ரன் தேவை.

வாழ்க்கையில் சகல வசதிகளையும் அனுபவிக்க, சலியாத உழைப்பை கொடுத்து, உடம்பில் வலுவை சேர்த்து மற்றவர்கள் உயர தன்னை தாழ்த்திக்கொள்ளும் குணத்தை தருபவன் என்ற முறையில் சனி தேவை.

மேல் சொன்னவைகள் எல்லாம் நல்ல யோகமாக மாற ராகு தேவை.

இவையெல்லாம் நன்கு நிறைவேறி,  வயதான காலத்தில் அமைதியும், தெய்வ சிந்தனையும் ஏற்பட்டு, நிம்மதியான வாழ்க்கைக்கு கேது தேவை. 

ஜாதகத்தில் இவர்கள் எல்லோருமே சுபர்கள் தான்.  எப்போது இவர்கள் பாபர்களாக மாறுகிறார்களோ அவர்கள் எதையோ குறிப்பால் உணர்த்துகிறார்கள் என்று அர்த்தம். அதற்கேற்ப ஜாக்கிரதையாக அவர்கள் பாபர்களாக வந்து, அதை தடை செய்யும் போது, அதற்கேற்ப பரிகாரகள் செய்து வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்
.  

 ……………………………………………………………அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்    



  


No comments:

Post a Comment