Saturday 23 July 2016

குல தெய்வம்
குலத்தையும் காக்கும், குடும்பத்தையும் காக்கும் தெய்வம்.





மனிதன் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.  சில அதில் சந்தோஷத்தை கொண்டு வரும்.  சில மனக் கவலையை தரும்.  சந்தோஷத்தை கொண்டு வரும் போது அவன் எதை பற்றியும் கவலை படுவதில்லை.  ஆனால் மனக் கவலை வரும் போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் நிற்கிறான்.  அதற்கு ஏதாவது பரிகாரம் இருக்குமா என்று குடும்ப பெரியவர்களை கேட்கிறான்.  சிலர் குடும்ப வழக்கப்படி கோடாங்கியை கேட்டு உடுக்கடித்து தெய்வ குறி கேட்பார்கள்.  சிலர் ஜாதகத்தை குடும்ப ஜோசியரிடம் காட்டி என்ன பரிகாரம் செய்யலாம் என்று கேட்பார்கள்.  அதற்கு அவர் உங்கள் பூர்வீகத்தை சேர்ந்த குல தெய்வ வழிபாடு செய்யுங்கள் எல்லாம் சரியாகும் என்பார்கள்.  சில குடும்பத்தில் குடும்ப பெரியவர்கள் இருப்பார்கள் .  அவர்களுக்கு அவர்கள் பரம்பரையில் வரும் குல தெய்வம் எது என்று தெரியும். உடனே சென்று பரிகாரம் செய்வார்கள்.  சிலருக்கு பரம்பரை குல தெய்வம் எது என்று தெரியாது.  அவர்கள் என்ன செய்வார்கள்.  ஜாதகத்தை வைத்து குல தெய்வம் கண்டு பிடிக்க முடியுமா.  நிச்சயமாக முடியும். 

ஒரு ஜாதகத்தில்  தெய்வ ஸ்தானம் என்பது ஐந்தாம் இடமும் ஒன்பதாம் இடமும் ஆகும்.  ஐந்தாம் இடம் பூர்வ புண்யஸ்தானம்.  தந்தை வழி பாட்டனார்களை சொல்லுமிடம். அதன் ஐந்தாம் இடம் ஜாதகத்தின் ஒன்பதாம் பாவமாகும்.  அவர்களின் இஷ்ட தேவதையை சொல்லுமிடம்.  அதேபோல் ஒன்பதாம் இடத்திற்கு ஒன்பதாம் இடம் ஐந்தாம் பாவமாகும்.  அதாவது தந்தை வழிபட்ட  தெய்வத்தை சொல்லுமிடமாகும்.  ஆகவே இந்த இரு இடங்களை கொண்டு குல தெய்வங்களை கண்டு பிடிக்கலாம் .  இந்த இடங்கள் ஆண் ராசியா, பெண் ராசிய எனக் கண்டு அந்த தெய்வங்கள் ஆண் தெய்வங்களா, பெண் தெய்வங்களா என தெரிந்து கொள்ளலாம். மேலும் அது நில ராசியில் உள்ளதா, நீர் ராசியில் உள்ளதா, என்பதை தெரிந்து கொண்டு அதன் இருக்குமிடத்தை கண்டு கொள்ளலாம். அதாவது  ஊரின் எல்லையில் உள்ள நீர் சார்ந்த இடஙகளுக்கு அருகில் இருக்கும். நில ராசியில் நின்றால் வயல் வெளி சார்ந்த இடங்களில் இருக்கும். நெருப்பு ராசியில் நின்றால் மலை மேல் இருக்கும்.  காற்று ராசியில் நின்றால் அது இடம் மாறி நிற்கலாம்.  இது ஜாதகர் மூத்த பிள்ளையாக இருந்தால் அவர் ஜாதகத்தில் இருந்து கண்டு பிடிக்கலாம்.

ஒரு குடும்பத்திற்கு குல தெய்வம் ஒன்றும் அதன் பரிவார தெய்வங்கள் இரண்டு சம்பந்தம் கொள்ளும்.  அதாவது ஒருவரின் பூர்வீகத்தில்  அதாவது உங்களுக்கு முன்பு ஏழு தலைமுறை பங்காளிகள் மூன்று தலைமுறையாக  ஒன்று சேர்ந்து எங்கு வாழ்ந்திருக்கிறார்களா அந்த ஊரில் இருக்கும்.  இதை குடும்பத்தில் உள்ள மூத்த பெரியவர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

சிலர் கேட்கலாம்  எனக்கு மூத்த பெரியவர்கள் யாரும் இல்லை.  இருப்பவர்களுக்கும் எங்கள் குல தெய்வம் எது என்று தெரியவில்லை.  என்ன செய்வது என்று கேட்டால் அதை பற்றி கவலை கொள்ள வேண்டாம்.   நிறைந்த வெள்ளிக் கிழமை   அன்று ஸ்வாமி சன்னதியில் (பூஜை அறையில்)   விடியற்காலை பிரம்ம முஹூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கக்ப்படி நெற்றிக்கு இட்டுக் கொண்டு, ஒரு ஐந்து முக குத்து விளக்கு எற்றி, அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய வஸ்த்திரம் சாற்றி, பூ சாற்றி  அதற்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு , வைத்து, சர்க்கரை பொங்கலிட்டு தீபம், தூபம் காட்டி,  எங்கள் குல தெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம் . ஆகவே எங்கள் குலதெய்வத்தை நினைத்து,  தங்களையே அவராக பாவித்து இந்த படையலை சமர்ப்பிக்கிறோம்.  இதனை தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குல தெய்வத்தை காட்டுவீராக  என்று வேண்டிக் கொண்டால் விரைவில் உங்கள் முன் தென்படுவார்.  அவர் இருக்கும் இடத்தை காட்டுவார். 

இன்னொரு முறை இருக்கிறது.   உங்கள் வீட்டின் தலை வாசலில் நிலையை கழுவி மஞ்சள் பூசி, குங்குமம் , சந்தனம் இட்டு  வஸ்த்திரம் சாற்றி, வெற்றிலை பாக்கு பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலைப்படி பூஜை செய்து மேற் சொன்னவாறு அதே வேளையில் வேண்டிக் கொண்டால் உங்கள் குல தெய்வம் கண்ணில் படும்.   மொத்தம் மூன்று தெய்வங்கள் ஒரு குடும்பத்துக்கு வரும். அதாவது ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம்.  அது பெருமாளாக இருக்கலாம்,  சிவனாக இருக்கலாம், அம்மனாக இருக்கலாம்.   பின் காவல் தெய்வங்களாக ஒரு கருப்பு வரும். அது பெண் தெய்வமாக இருக்கலாம் அல்லது ஆண் தெய்வமாக இருக்கலாம்.  மொத்தத்தில் பதினெட்டு ஆண் கருப்பு ( இவை வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும்)  பதினெட்டு பெண் காவல் தெய்வங்கள்.  அவை யாவை என பார்ப்போம்.

ஐய்யனார்,  மதுரை வீரன்,  காத்தவராயன், ஒண்டிக் கருப்பன், கருப்பண்ண சாமி, வீரனார், சங்கிலிக் கருப்பன், ஆகாய கருப்பன், ஆத்தடி கருப்பன், நொண்டிக் கருப்பன், மார்நாட்டு கருப்பன், மண்டக் கருப்பன், முன்னடிக் கருப்பன், சமயக் கருப்பன், பெரிய கருப்பன், சின்ன கருப்பன், சப்பாணி கருப்பன், சோனமுத்து கருப்பன், முனியாண்டி, பெரியாண்டவர், பால்முனி, வண்னிகருப்பு சாமி, மந்தை கருப்புசாமி, ஒத்தைபனை கருப்பு,  சுடலை மாடன், மாசான கருப்புசாமி, வலநாட்டு கருப்பு சாமி, பதினெட்டாம்படிக் கருப்பன், சந்தான கருப்பன், பால்பாரை முத்து கருப்பு சாமி, கரடையன் சாமி, காட்டு கருப்பு சாமி, புளியாடி கருப்பு, காரையாடி சின்ன கருப்பு, வேட்டை கருப்பு சாமி, குள்ள கருப்பு சாமி, பெருங்காடு கருப்புசாமி, பொன்னுவீரையன் கருப்பு சாமி, கோட்டை கருப்பு சாமி,  மூடுபாறை கருப்பு சாமி, கிள்ளிக்கூண்டு கருப்பு சாமி, மலையாள கருப்பு சாமி, கள்ளன் களச்சி கருப்பு சாமி, பாவாடை ராயன், சாஸ்தா.  இவர்கள் ஆண் கருப்பு  தெய்வங்கள். ஊரை காக்கும் எல்லை  தெய்வங்கள்.

வீரமா காளி, குலுமாயி அம்மன், மகமாயி,  எல்லை பிடாரி,  பெரியாச்சி, எல்லை மாரி,  பேச்சியம்மன், பூவாடைகாரி,  செல்லியம்மன், கன்னிமார்,  சீலைகாரி, பச்சையம்மன், துலக்கானத்தம்மன், வனதுர்க்கை, செல்லாயி அம்மன், காட்டேரி அம்மன், அம்முச்சியார், மாசானியம்மன்,  இவர்கள் பெண் கருப்பு எல்லை தெய்வங்கள்.   

குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசியம்.  வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று  அவர்களுக்கு செய்யவேண்டியதை செய்து, கொடுக்க வேண்டியதை கொடுத்தால் குலம் தழைத்து, வரும் சந்ததிகள் சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிக்கும். அவர்கள் உங்களிடம் அதிகம் எதுவும் எதிர்பார்ப்பதில்லை.    உங்கள் கையால் ஒரு சாதரண அபிஷேகம்,  ஒரு வஸ்த்திரம், ஒரு கவளம் அரிசி வெல்லம் கலந்த சோறு.  இதை கொடுத்தாலே பொதும்.  அவர்கள் எப்போதுமே உங்கள் வீட்டின் வாசலில் காவலாக நின்று எந்த கெட்ட விஷயத்தையும் அண்ட விடமாட்டார்கள். 

ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி , சனி இவர்க்கள் 6,8,12ம் இடங்களில் மறைந்தாலோ,  நீச்சப் பட்டாலோ நீங்கள் உங்கள் குல தெய்வங்களை சரியாக வழிபடவில்லை என்று அர்த்தம்.  குல தெய்வம் சாபமிடாது. அந்த குலத்தை சார்ந்த நீங்கள் சரியாக வழிபடவில்லையே என்று மனது வருத்தப்படும். அதனால் வீட்டில் நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள் தள்ளி போகும்.  ஆகவே எல்லோரும் தவறாது குல தெய்வ வழிபாட்டை செய்து சந்தோஷமாயிருங்கள்.       

நாள் செய்யாததை கோள் செய்யும்.  கோள் செய்யாதை குல தெய்வம் செய்யும்.

வாழ்க வளமுடன். ……… அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.


2 comments:

  1. அருமையான பதிவு, மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete