Wednesday 21 March 2018

சனீஷ்வரன் ஒரு மஹா புருஷன்

சனீஷ்வரன்  : இந்த பெயரை கேட்டாலே மனதில் ஒருவித பயம், கலக்கம் தன் எதிர்காலத்தை பற்றிய கவலை இதெல்லாம் மனதில் தோன்றுகிறது.  இது சரியா தவறா.  உண்மையாக சொல்வதென்றால் இது தவறு தான்.   சனி தன் நிலையில் ஜாதகத்தில் எங்கு நின்றாலும் அந்த பாவத்தை தூய்மை படுத்ததான் நிலை பெறுகிறாரே தவிர மற்ற படி நாம் நினைப்பது போல் இல்லை. அதாவது ஒரு தொழிற்ச்சாலையில் உள்ள இயந்திரங்களுக்கு ஹாலிடே பீரியட் என்று ஒன்று இருக்கும். அதாவாது தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் அவற்றிற்கு ஒய்வு கொடுத்து அதை சரி செய்து மீண்டும் இயக்குவார்கள்.  அதைபோல் தான் நம் மனித உடம்பும். அதை சரி செய்வதே நம் சனீஷ்வரன்தான். 

 இதை சற்று விரிவாக பார்ப்போம்.
சனி பகவானுக்கு சுபத்தன்மை உண்டா இல்லையா.  நிச்சயமாக உண்டு.  அது எப்படி சூரியன் புதல்வன்தன் தந்தையின் குணத்துக்கு எதிராக செயல் படுவார்.  ஆஸ்ட்ரானமிபடி சூரியனில் இருப்பது ஹைட்ரஜன் வாயு.  சனியில் இருப்பதும் இதேதான் சற்று குறைவு. அதோடு ஹீலியம் வாயுவும் உண்டு. இவை தான் ஒரு அணு உருவாக காரணிகள்.  ஆகவே தான் சனியின் தன்மை கர்மாவை தரும் காரணியாக இருந்து கர்ம காரகனாக இருக்கிறார். அவர்  தயவு இல்லாமல் ஒரு கர்மாவும் நடை பெறாது.     அவரவர் கர்ம வினைகளைக்கேற்ப தான் பலன்களை தருவார்  செய்வார். சனி நல்லது செய்ய வேண்டும் என்றால் அதை அவர் குருவின் மூலமாக அல்லது லக்ன சுபர் மூலமாகத்தான் செய்வார்.

சனீஷ்வரனுக்கு வேலைக் காரன் என்ற பெயரும் உண்டு.  அதாவது ஒரு ஜாதகருக்கு வேலையை தருவதே இவர் தான். என்ன தான் ஜாதகத்தில் பத்தாம் பாவம் ஒருவரின் தொழிலை பற்றி தெரிந்து கொள்வது என்றாலும் அந்த தொழிலில் அவர் எப்படி செயல் படுவார் என்பதை சனியின் இருப்பிடத்தை வைத்து தான் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஒரு ஜாதகத்தில் சனீஷ்வரன் பலம் பெற்றாலும் சரி அல்லது பலம் பெறாவிட்டாலும் சரி அவர் தன் நிலையில் இருந்து சற்று விலகாமல் அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப பலா பலன்களை எவ்வாறு தரவேண்டுமோ அவ்வாறு தருவார். நல்ல கர்ம வினை உள்ளவர்களுக்கு நல்ல பலன்களையும் அது சரியில்லாதவர்களுக்கு கஷ்ட பலன்களையும் தருவ்வார்.  அதாவது தர்ம நியாபடி நடப்பவர்களுக்கு சனீஷ்வரன் தன் ராசி பெயர்ச்சியால் எந்த ராசியில் நின்றாலும் அவர்களுக்கு நல்ல பலன்களை தான் தருவார்.   

அதாவது ஒவ்வொருவரும் தான் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.   தினமும் நாம் ஈடுபடும் அத்துனை கர்மாவுக்கும் சனியே பிரதானமாகிறார். ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஆன்மீகத்தில் உள்ளவர் இல்லாதவர் அதாவது இறை பக்தி உள்ளவர் இல்லாதவர்.  அது எவராக இருந்தாலும் தன் ஒழுக்கத்தில் இருந்து தவறுபவராக இருந்தால் அதற்குறிய  தண்டனையை தருபவர் சனீஷ்வரன் தான்.   

சனீஷ்வரன் நம் சூரிய குடும்பத்தில் கடைசி வட்டத்தில் இருப்பவர் . அதனால் அவர் ராசி சக்கரத்தை சுற்ற எடுத்துக் கொள்ளும் காலம் முப்பது வருடங்கள் ஆகிறது. அதாவது ஒரு ராசியில் முப்பது மாதங்கள் இருப்பார்.  சனீஷ்வரன் எட்டில் நின்றாலும் மீன ராசியில் இருந்தாலுமாஆயுள் தீர்க்கம் உண்டு என்பார்கள்.  ஆனால் அப்படி இல்லாதவர்களுக்கு ஆயுள் குறைவாக இருக்கிறதா. அப்படி இல்லை.  கர்மா கணக்கு சீக்கிரம் தீர்ந்தவர்களுக்கு எதற்கு அதிக ஆயுள்.  ஆயுள் அதிகம் என்றாலே அதற்கேற்ப அதிக கஷ்டட்தையும் அனுபவிக்க வேண்டுமல்லவா.  

சனீஷ்வரனின் வீடுகளான மகரம் கும்பம் இரண்டுமே அருகருகே இருப்பதால் மேஷ லக்னத்தில் இருந்து மீன லக்னம் வரை ஒவ்வொரு ராசிக்கும் சனீஷ்வரனின் வீடு ஒரு சுப வீடாக வரும். ஆகவே ஒவ்வொரு லக்னத்திற்கும் அவர் சுப பலனை தந்துதானே ஆகவேண்டும்.  ஒருவரின் வாழ்க்கையில் கிட்டதட்ட பதினெட்டும் ஆண்டுகள் அவர் சஞ்சரிக்கும் ராசிக்கு ஏற்ப,  விரய சனி, ஜன்ம சனி, குடும்ப சனி, அர்த்தஷ்டம சனி, களத்திர சனி, அஷ்டம சனி, கண்ட சனி என்கிற ரீதியில் பலன்களை தருவார்.  அது சிலருக்கு சுப பலனையும் தருவார், சிலருக்கு அசுப பலனையும் தருவார்.  அதனால் அவருக்கு பெயர் கர்மாதிபதி என்று பெயர்.  ஆகவே இந்த கர்மாதிபதி தன் கர்ம பலனை சுபமாக தரவேண்டும் என்றால் தர்மாதிபதி எனும் குருவோடு தொடர்பு வேண்டும்.  ஆகவே ஒருவர் ஜாதகத்தில் சனியும் குருவும் தொடர்பில் இருந்தால் அவருக்கு கோசாரத்தில் சனி எந்த பாதிப்பையும் தரமாட்டார்.
அல்லது அவருக்கு ஜாதகத்தில் அவரின் பூர்வ புண்யாதிபதி அல்லது பாக்யாதிபதி தொடர்பு இருந்தால் நல்லது.  ஒருவருக்கு தொழில் சரியாக போகவில்லை என்றால் அதற்கும் சனீஷ்வரன் தான் காரணம், ஒருவருக்கு உடல் நிலை கஷ்டப்படுத்துகிறது என்றால் அதற்கும் சனீஷ்வரன் தான் காரணம் என்று சொல்லியே பழக்கப்பட்டு விட்டோம்.  ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை கருப்பாக பிறந்து விட்டால் அதற்கும் காரணம் சனீஷ்வர்ன் தான். அவனை கூப்பிடும் போதெல்லாம் சனியனே என்றுதானே கூப்பிடுவார்கள்.   தனக்கு சுக்ர தசா வந்தால் மகிழ்ச்சி என்பதாக நினைக்கும் மனம் சனி தசா வந்தால் கஷ்டப்படுத்துகிறது.   

கிரகங்களின் பலத்தை பற்றி நுணுக்கமாகச் சொல்லப் போனால் உச்சம் பெறும் அனைத்துக் கிரகங்களும் நமக்கு நன்மை செய்யும் என்றால் நமது ஞானிகள் சுபக்கிரகங்கள் பாபக் கிரகங்கள் என்று கிரகங்களை இரண்டு பிரிவாக பிரித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.  ஏன் என்றால் சிலருக்கு செவ்வாயும் லக்னாதிபதியாக வருவார்.  சனீஷ்வரனும் லக்னாதிபதியாக வருவார்.  சூரியனும் லக்னாதிபதியாக வருவார். சனீஷ்வரனின் வீட்டில் தான் செவ்வாய் உச்சமாகிறார்.  ஆனால் ஒரு சுபரான குரு அங்கு நீச்சமாகிறார்.  ஒரு சுபரான சுக்ரன் வீட்டில் தான் பாபர் எனும் சனீஷ்வரன் உச்சமாகிறார்.  ஆகவே எவரும் சுபரும் இல்லை. பாபரும் இல்லை.

ஆகவே சனிப் பெயர்ச்சி எனும் காலங்களில் மனம் தளராமல் தன் வேலைகளை நன்றாக செய்து வந்தாலே அதுவே சிறப்பை கொண்டு வரும். கோசார ரீதியாக சனிப் பெயர்ச்சி அவரவர் லக்னத்திற்கோ, ராசிக்கோ பாதகமான இடத்தில் சஞ்சரித்தாலும் அவரவர் ஜாதக ரீதியாக தசா புத்திகள் நன்றாக நடந்தால் பாதக பலன் குறைவாகதான் இருக்கும். தசா புத்தி சரியாக இல்லாதவர்களுக்கு சற்று பாதக பலன்கள் ஏற்படலாம். ஆகவே பொதுவான பரிகாரமாக அங்க ஹீனமானவர்களுக்கு உதவி செய்வது.  தன்னை விட தாழ்ந்தவர்களுக்கு உதவி செய்வது.  வாரம் தவறாமல் எண்ணெய் தேய்த்து குளிப்பது.  நள புராணம் வாசிப்பது, கேட்பது.  சனீஷ்வர காயத்திரியை தினம் 108 முறை ஜபிப்பது.  ஹனுமன் ஸ்லோகம் சொல்வது.   தன் வீட்டில் உள்ளோர் காலணிகளை தினமும் துடைத்து வைப்பது, வெளியில் சென்று வரும் போது காலை நன்கு கழுவிக் கொள்வது ,  குரங்குகளுக்கு வாழை பழம் வாங்கி தருவது, ஆகியவை செய்யலாம்.

பொதுவாக, ஜன்ம சனி நடப்பவர்கள் திருகொள்ளிக் காடு, திருநள்ளாறு சனீழ்ஹ்வரன் கோயில், சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோயில், தர்மராஜா கோயில் ஆகிய இடங்களுக்கு சென்று ஜன்ம நக்ஷத்திரம் அன்று வழிபாடு செய்து நலம் தரும்.

என்னடா இது  எல்லோரும் சனீஷ்வரனை கெட்டவராகவே சொல்லும் போது இவர் நல்லவராகவே சொல்கிறாரே என்று நினைப்பீர்கள்.  சனீஷ்வரனை போல் கொடுப்பார் இல்லை.  காலபுருஷனின் ஜீவனாதிபதி லாபாதிபதி ஆவார் சனீஷ்வரன்.  ஆகவே சனீஷ்வரனை துதித்து சகல சங்கடங்களையும் போக்கவேண்டும் என்று வேண்டி பிராயச்சித்தம் செய்யுங்கள். எல்லோருக்கும் சனீஷ்வர பகவான் நன்மையே செய்வார்.
வாழ்க வளமுடன். 
அன்புடன்
சிரோண்மனி ஸ்ரீரங்கம் கிருஷ்ணன்

பாரம்பர்ய ஜ்யோதிஷ் வித்யா பீடம். 

No comments:

Post a Comment