Monday 13 June 2016

ஜோதிஷனும் ஜோதிஷமும்

Saint Tulsidas Vector Illustration - stock vector



ஜோதிடர்களாகிய நாம் எங்கே தவறு செய்கிறோம்.  ஒரு ஜாதகத்தில் பலன் கணிப்பதில் நாம் சரியான வழி முறைகளை கையாண்டு பலன் சொல்கிறோமா.  நமக்கே சந்தேகம் வருகிறது.  ஜோதிஷன் வாக்கு தெய்வ வாக்கு என்று சொலவார்கள்.  அந்த வாக்கு அந்த சமயத்தில் தவறான பலனை தந்து விட்டால் அது தான் அந்த ஜாதகத்தின் அப்போதய பலனாக இருக்கும்.  பிறகு நமக்கு மன வருத்தம் ஏற்பட்டு அதற்காக ஒரு ஜோதிஷனே பரிகாரம் செய்ய வேண்டிய நிலைக்கு செல்ல வேண்டி உள்ளது. 
.
ஜாதகத்தில் முக்கியமானவை ராசி சக்கரம், நவாம்ச சக்கரம் மற்றும் பாவ சக்கரம் ஆகியனவாகும். இதில் ராசி சக்கரம் அடிபடையானது. ஒரு சிசு ஜன்னமாகும் போது அன்றய கோசார கிரஹங்களை வைத்து கணிப்பது.  இதை வைத்தே பெரும்பாலான பலன்கள் கணிக்கப்படுகின்றன. ராசியை வைத்துமட்டும்  துல்லியமான பலனை கணிப்பது இயலாத காரியம். ராசியில் இருக்கும் கிரஹ வலிமையை நவாம்சத்தை வைத்து இறுதி செய்யவேண்டும்.  அதேபோல் கிரஹங்கள் எந்த பாவத்தில் சரியாக அமர்ந்திருக்கிறது என்பதையும் பாவச் சக்கரத்தில் இருந்து முடிவு செய்து அதன் படி பாவ பலன்களை இறுதி செய்வது நல்லது.  அடுத்து தசா புத்திகள், கோசார நிலைகளை கொண்டு இறுதி செய்த பலனை உறுதி செய்து கொண்டு பலன் உரைப்பது நலம்.

அடுத்து  உறுதி செய்து கொண்ட பலனை உரைப்பதற்கு முன் ஒரு ஜோதிஷன் தன் குல தேவதா, இஷ்ட தேவதாவை மனதில் தியானித்து நான் உரைக்கும் இந்த பலன் ஜாதகரின் குறைகளை நிவர்த்தி செய்து அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வர நீ தான் அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இது நான் சொல்லும் பலன் அல்ல. என் நாவில் அமர்ந்து நீ சொல்லும் பலன் என்று சொல்லி பலன் உரைப்பது நல்லது. திருவருளும் குருவருளும் இல்லையென்றால் ஜோதிஷன் வாக்கில் தெய்வம் நிற்காது. 

இதில் லக்கினம் முதல் வீடாக கருதப்படுகிறது. நவாம்சம் என்பது ராசியை ஒன்பதாக பிரிப்பதாகும். பாவ சக்கரம் என்பது துல்லியமான கணக்கீடாகும். இதில் ஒரு வீடு என்பது ஒரு முழு ராசி அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட ராசிகளில் ஒரு பாவம் வியாபித்திருக்கலாம். ராசியில் ஒரு வீட்டில் இருக்கும் கிரகம் பாவத்தில் வேறு வீட்டில் இருக்கலாம். பாவக சக்கரம் கணிக்க பாவ ஸ்புடங்கள் கணிக்க வேண்டும். இதற்கு லக்கினம், அதற்கு நேர் எதிரே இருக்கும் ஏழாம் வீடு அடுத்து  பத்தாம் வீடு  அதற்கு நேர் எதிரே இருக்கும் நான்காம் வீடு  இவற்றை கணிக்க வேண்டும். இதற்கு நிறைந்த கணித அறிவும் பாவ அட்டவணை  மற்றும் பஞ்சாங்கம்  தேவைப்படும். ஆனால் இதெல்லாம் கணிப்பொறி காலத்திற்கு முன். இப்பொழுது கணிணியில் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் இவற்றை உள்ளீடு செய்தால் சில  வினாடிகளில் அனைத்து கணக்கீடுகளையும் செய்து கணினி நமக்கு தருகிறது. பல மணி நேரங்களில் செய்ய வேண்டிய கணக்குகள் சில வினாடிகளில் முடிக்கப்படுகிறது! எனவே ராசி சக்கரம் என்பது தோராயமான பாவ சக்கரமாகும். ஆகவே தற்போது ராசியை வைத்து பலன் கணிப்பதில் அவ்வளவாக தவறு நேர வாயில்லை. 

நல்ல அறிவு சார்ந்த திறமையான ஜோதிஷனுக்கு உள்ள கிரஹ பலத்தை பார்ப்போம்.: 

1.  ஒரு ஜாதகத்தில் பத்தாம் பாவ அதிபதி புதனுடைய நவாம்சத்த்ல் இருப்பது.

2.  ஸூரியன் மிதுனத்தில் இருப்பது .சிம்மத்தில் இருக்கும் சந்திரனை புதன் பார்ப்பது.   கடக சந்திரனுக்கு குரு பார்வை கிடைப்பது.

3.  பத்தாம் பாவ அதிபதி ராசியில் புதனுடை வீட்டில் இருப்பது. 

4.  அஸ்வினி 3ம் பாதம், 4ம் பாதம்,  ரோகிணி 3ம் பாதம் , விசாகம் 1ம் பாதத்தில் ஜனனம் நிகழ்வது.

5.  புதன் லக்ன கேந்திரம் பெறுவது.  இரண்டாம் பாவதிபதி உச்சம் பெறுவது.  சுக்ரன் உபய ராசியில் இருப்பது. மூன்றாம் பாவ அதிபதி, சுக்ரன் உச்சம் பெறுவது..

6.  திரி கிரஹ யோகாவான சந்த்ரன் சுக்ரன் சனி ஆகியோர் ஐந்தில் இருப்பது.

7.  லக்னாதிபதி 5ல் இருந்து அங்கு அவர் பலம் பெறுவது.   2,5,8ம் அதிபதிகள் இரண்டாமிடமான வாக்கு ஸ்தானத்தில் இருப்பது. ஆனால் இதில் அந்த இடம் அந்த மூன்று வீட்டு அதிபதிகளின் நீச்ச வீடாக இருக்க கூடாது

8.  நான்காமாதி பாவியாகி திரிகோணத்தில் இருப்பது.  2, 8, 12 க்குடையவர்கள் புதன் அல்லது குருவோடு சேர்வது.

9.  கேந்திரங்களில் பாதகாதிபதிகள், பாபர்கள் இல்லாம இருக்க, சுக்ரன் உச்சம் பெற்று அது 2ம் வீடாக இருந்து புதன் சேர்வது.

10.  இரண்டாம் பாவாதிபதி கேந்திரம் ஏறி, புதன் குருவோடு சேர்வது.  அல்லது அவர்கள் வீட்டில் இருந்து பார்வை பெறுவது. பெளர்ணமி சந்திரனுக்கு சனி சேர்க்கை இருந்தால் அவர் உயர்ந்த ஜோதிடர். 

நூல் ஆதாரங்கள்:  ஜாதக பாரிஜாதம், வராஹமிஹிரரின் ஹோரா சாஸ்த்திரம்,  பலதீபிகா, ஜாதக அலங்காரம், கர்க்க முனிவரின் கிரஹ யோகம்,   ச்த்யாச்சாரியார் நூல், வீமகவி, ஜாதக சூடாமணி.


......................................................................அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்    





2 comments: